11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம்

icc 2015 world cupமெல்போன்: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்:
களத்தடுப்பு கட்டுப்பாடு
கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் கட்டுப்பாடு வந்தது. 3 ஆக இருந்த ‘பவர் பிளே’, 2 ஆக மாற்றப்பட்டது. இதில், முதல் 10 ஓவர்களில் 2 பேர், ‘பெட்டிங் பவர் பிளேயில்’ (40 ஓவருக்குள்) 3 பேர் தான் உள்வட்டத்துக்கு வெளியே களத்தடுப்பு செய்ய வேண்டும். தவிர, மற்ற நேரங்களில் 4 பேர் தான் உள்வட்டத்துக்கு வெளியே ‘பீல்டிங்’ செய்வர்.
2 புதிய பந்து
2011 உலக கோப்பை தொடருக்குப் பின், 2 புதிய பந்தில் போலிங் செய்யும் முறை அறிமுகம் ஆனது. பழைய முறைப்படி 34 ஓவருக்குப் பின் பந்தின் தன்மை மாறிவிடும். இதில் இரு பந்துகளிலும் தலா 25 ஓவர்கள் தான் வீசப்பட்டு இருக்கும். இது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. அதேநேரம், ‘ரிவர்ஸ் சுவிங்’ செய்வது சற்று கடினம்.
‘பார்ட் டைம்’ ஆதிக்கம் குறைவு
உள்வட்டத்துக்குள் அதிக களத்தடுப்பாளர்கள் இருப்பதால், ‘பார்ட் டைம்’ பந்துவீச்காளர்களை வைத்து சமாளிக்க முடியாது. அணியில் 5 பந்துவீச்சாளர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டிய நிலை, இவர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
விதிமீறலுக்கு தடை
சுழற்பந்து என்ற பெயரில், ஐ.சி.சி., நிர்ணயித்த அளவை விட (15 டிகிரி) அதிகமாக கையை வளைத்து பவுலிங் செய்த பவுலர்கள் மீது சமீப காலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒருநாள் போட்டிகளின் ‘நம்பர்-1′ பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் (பாக்.,) தடையில் உள்ளார். இலங்கையின் சேனநாயக்க இப்போது தான் மீண்டுள்ளார்.
இந்தியாவில் நடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் புகார் கூறப்பட்ட மேற்கிந்தியதீவின் சுனில் நரைன், இதன் பின் போட்டிகளில் பங்கேற்கவே இல்லை.
‘சுப்பர் ஓவர்’ இல்லை
1999ல் அரையிறுதி ‘டை’ ஆன போது, ‘சுப்பர் சிக்ஸ்’ சுற்றில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய அவுஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்குப் பதில், 2007ல் ‘பவுல் அவுட்’ முறை வந்தது. இதுவும் மாற்றப்பட்டு, 2011 உலக கோப்பை தொடரில், ‘சுப்பர் ஓவர்’ முறை வந்தது. தற்போது, இதுவும் இரத்தாவதால், இறுதி ஆட்டம் போன்ற நொக் அவுட்’ போட்டி ‘டை’ ஆனால், கோப்பை பகிர்ந்து தரப்படும்.
பரிசு அதிகம்
உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத்தொகை 2011ஐ விட 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 63 கோடி யாக உயர்ந்தது. சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு மட்டும் ரூ. 24.6 கோடி கிடைக்கும்.
நடுவர் மறு பரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.’)
கடந்த 2011ஐ போல, ‘டி.ஆர்.எஸ்., இருந்தாலும், ‘ஹொட் ஸ்பொட்’, ‘ஸ்னிக்கோ மீட்டர்’ என, எந்த முறையை பயன்படுத்தி ‘அவுட்’ தரவுள்ளனர் எனத் துல்லியமாக தெரியவில்லை.
அதேநேரம், ‘எல்.பி.டபிள்யு.,’ ஆட்டமிழப்பை அறிய, கடந்த 2011ல் சர்ச்சை கிளப்பிய ‘போல் டிராக்கிங்’ முறை, இப்போது கிடையாது.
வேகத்துக்கு சாதகம்
பீல்டிங் கட்டுப்பாடு, 2 புதிய பந்து காரணமாக, வேகத்துக்கு சாதகமான நியுசிலாந்து ஆடுகளங்களில் பந்து நன்கு ‘சுவிங்’ ஆகும். அவுஸ்திரேலியாவில் நல்ல வேகத்துடன் எகிறும். இதனால், இம்முறை வேகப்பந்து வீச்சாளர் கள் ஆதிக்கம் செலுத்துவர் எனத் தெரிகிறது.
இளமையின் வரவு
கடந்த 2011ல் இருந்த சச்சின், சேவக், ஸ்மித், கலிஸ், முரளிதரன், பொண்டிங், பீட்டர்சன் போன்ற சீனியர்கள் கிடையாது. இதற்குப் பதில் கோஹ்லி, கோரி ஆண்டர்சன், பின்ச், மொயீன் அலி, மிட்சல் ஸ்டார்க் ஜொலிக்க காத்திருக்கின்றனர்.
அதிகரிக்கும் ‘ரன்ரேட்’
கடந்த 2007ல் சராசரி ரன்ரேட் 4.95, 2011ல் 5.03 என, இருந்தது. தற்போதைய புதிய விதிகள் காரணமாக 2014க்குப் பின் அவுஸ்திரேலியா (5.42), நியுசிலாந்து (5.64) மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ‘ரன் ரேட்’ வேகமாக உயர்ந்தன. இது உலக கோப்பை தொடரில் இன்னும் அதிகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் 14 அணிகள்
கடந்த 2011 உலக கோப்பை தொடருக்குப் (14 அணிகள்) பின், 2015, 2019 தொடர்களில் 10 அணிகள் மட்டும் பங்கேற்கும் என, அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து போன்ற ஐ.சி.சி., உறுப்பு நாடுகளிடம் எதிர்ப்பை ஏற்படுத்த, அடுத்த 3 மாதங்களில் இது திரும்பப் பெறப்பட்டது. இதனால், மறுபடியும் 14 அணிகள் பங்கேற்கின்றன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment