றோயல் கல்லூரி நிகழ்வில் பிரதமர் ரணில் தெரிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையப் போவது ஐ. தே. க. அரசாங்கமா, சுதந்திரக் கட்சி அரசாங்கமா அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அரசாங்கமா என மக்கள் தன்னிடம் கேட்பதாகக் குறிப்பிட்ட பிரதமர். அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யக்கூடிய வகையில் முன்மாதிரியான அரசியல் முறையொன்றை கட்டியெழுப்புவதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.
அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளதென வலியுறுத்திய பிரதமர், அதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு அனைவரும் செயற்பட்டால் எமது நாட்டை ஆசியாவின் முன்னோடி நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மேலும் பதினைந்து அமைச்சர்களுக்குமான பாராட்டு நிகழ்வொன்று நேற்று றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இலங்கைக்கு இத்தகையதொரு முன்னணி வளர்ச்சிப் போக்கு அவசியமா என சபையோரிடம் வினவிய போது அனைவருமே கைகளை உயர்த்தி ஏகோபித்த குரலில் அவசியம் என பதிளித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
அத்தகையதொரு வளர்ச்சிமிக்க நாடும் சிறந்த எதிர்காலமும் அமைய சகல அரசியல்வாதிகளதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றும் அதனைக் கட்டியெழுப்ப றோயல் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பையும் கோரினார். இன்னும் ஐந்து வருட காலத்தில் நாட்டை முன்னேற்றி மக்கள் இழந்த அனைத்தையும் மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், நூறு நாள் வேலைத் திட்டம் அதற்கு சவாலாகவுள்ளதாகவும் அதற்கு முகங்கொடுக்கும் விதத்தை மக்கள் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
றோயல் கல்லூரியில் கற்றவர்கள் எப்போதும் சவால்களைப் பொறுப்பேற்று நாட்டுக்காக சேவை செய்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், றோயல் கல்லூரியில் தாம் கற்கக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, எம். ஏ. சுமந்திரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment