இங்கிலாந்தை அதிரவைத்த நியூசிலாந்து

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடியிருந்தன. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆயினும், நியூசிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து ஓட்டங்களைப் பெறுவது இங்கிலாந்து வீரர்களுக்கு பிரம்மப்பிரயத்தனமாக அமைந்தது.  

ஆரம்ப விக்கெட்டுக்களிரண்டையும் டிம் சௌதி வீழ்த்தி ஆட்டத்தை ஆரம்பித்துவைத்தார். போல்ட், மில்னே, வெற்றோரி ஆகியோரும் தமது பங்குக்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, பின்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களையும் வரிசையாக ஆடுகளத்தை விட்டு அனுப்பிவைத்தார் டிம் சௌதி. 

இங்கிலாந்தின் ஜோ ரூட் மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடி 46 ஓட்டங்களைச் சேர்த்தார். 33.2 ஓவர்களை மாத்திரமே எதிர்கொள்ளமுடிந்த இங்கிலாந்து அணியால் 123 ஓட்டங்களைச் சேர்க்கமுடிந்திருந்தது. 9 ஓவர்களை வீசிய டிம் சௌதி 33 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்திருந்தார். பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, தனது துடுப்பாட்ட வேகத்தைப் பரீட்சித்துப் பார்த்தது. 

19 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்து தனது உலகக்கிண்ண சாதனையைத் தானே முறியடித்தார் பிரண்டன் மக்கலம். 39 நிமிடங்கள் களத்திலிருந்த இவர், 25 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளை விளாசி 77 ஓட்டங்களைப் பெற்றார். கப்டில் 22 ஓட்டங்களை எடுத்தார். 

12.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது நியூசிலாந்து அணி. போட்டியின் நாயகனாக நியூசிலாந்தின் டிம் சௌதி தெரிவானார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment