கிறிஸ் கெயில் அதிரடியாகப் பெற்ற சதத்தின் உதவியுடன் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் 138ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 40ஆவது போட்டி பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்குமிடையில் நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 226ஓட்டங்களைப் பெற்றது.
பெங்களூர் சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் 57பந்துகளில் 12 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 117ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தார். விராட் கோஹ்லி 32ஓட்டங்களையும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 47ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 13.4ஓவர்களில் வெறுமனே 88ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அவ்வணி சார்பாக அக்ஷர் பட்டேல் ஆட்டமிழக்காது 40ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். சாஹா 13ஓட்டங்களைப் பெற்றதோடு ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர். பந்து வீச்சில் ஸ்டாக், அரவிந் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment