“பஸ்சாலை இறங்கி நேரை உங்களிட்டைத்தான் வாறன்” என்று ஒரு கையை மடக்கிக் கழுத்தைத் தடவியபடி சொன்னார்.
மழை நீரால் நிறைந்து கிடக்கும் வயல்களையும், போரினால் சிதைந்து இன்னமும் திருத்தப்படாது கிடக்கும் கட்டடங்களையும் பார்த்துக் கொண்டே பகல் முழுவதும் பயணம் பண்ணியிருக்கிறார். ஒரே பக்கமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தபடி வந்ததில் பிடித்துவிட்டது.
படுக்கையில் இசகு பிசகாகப் படுப்பது, படுத்திருந்தபடி புத்தகம் படிப்பது, கணினி மற்றும் ரீவி திரையை நேரே இருந்து பார்க்காது கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பி நீண்ட நேரம் பார்ப்பது, நீண்ட நேரம் ஒரு நிலையில் இருந்து வாகனம் செலுத்துவது, தலையணைகளை உயர்த்தி வைத்துப் படுப்பது போன்ற கழுத்துத் தசைகளுக்கு அதிக வேலைப்பளு கொடுக்கும் செயற்பாடுகளால் அத்தகைய வலிகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு திடீரெனக் கழுத்தில் வலி எழுவதும், அதை ஆட்டி அசைக்க முடியாது துன்பப்படுவதும் மருத்துவர்கள் அடிக்கடி காணும் ஒரு பிரச்சினைதான். நம்மில் ஒவ்வொரு மூன்றுபேரில் இருவருக்கு தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது கழுத்து வலிப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தரவுகள் சொல்கின்றன.
இவ்வாறான வலிகள் பொதுவாக ஆபத்தான நோய்கள் அல்ல. ஏன் வருகிறது என்பதற்கு அச்சொட்டான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. கழுத்தைத் தவறான நிலையில் வைத்திருந்ததால் அல்லது திருப்பியதால் ஏற்பட்ட பிடிப்பாகவே இருக்கும். கழுத்தை ஆட்டாமல் அசையாமல் ஒரே நிலையில் வைத்திருப்பதைத் தவிர்த்து வழமைபோல இயங்குவதுடன் கடுமையான வேலைகளைக் கொடுக்காமல் வைத்திருக்க தானாகவே குணமாகிவிடும். அல்லது வலி நிவாரணி மருந்துகளை சில நாட்களுக்கு உட்கொள்ளத் தணிந்துவிடும்.
இருந்த போதும் வலி தொடர்ந்து இருந்தால் அல்லது வலியுடன் மேற்கை முன்னங்கை, கைவிரல்கள் போன்ற இடங்களில் மரப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் அது சற்று தீவிரமான நோயாக இருக்கக் கூடும். அதேபோல் தோள் மூட்டில் கடுமையான வலியாக இருந்தாலும் மருத்துவரைக் காண வேண்டும்.
காரணங்கள்
தசைப் பிடிப்புகள் - நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக கழுத்தின் தசைகளுக்கு வேலை கொடுப்பதால் அவ்வாறு நேரலாம். கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன உதாரணங்கள் இதற்குப் பொருந்தும்.
கழுத்து எலும்புகளின் தேய்வு – வயது மூப்படையும் போது முழங்கால் மற்றும் இடுப்பு எலும்புகள் படிப்படியாகச் சேதம் அடைவது போலவே கழுத்தில் உள்ள முண்ணான் எலும்புகளும் சேதம் அடைவதால் கழுத்தில் வலி ஏற்படலாம்.
நரம்புகள் அழுத்துப்படுதல்
முண்ணான் எலும்புகள் ஊடாக நரம்புகள் வெளிவந்து உடல் உறுப்புகள் அனைத்திற்கும் செல்கின்றன. கழுத்து முண்ணான் எலும்புகள் சேதமடையும் போது அதிலிருந்து எலும்புத் துருத்தல்கள் வளர்வதுண்டு. அல்லது முண்ணான் எலும்புகள் சேதமடைவதால் அவற்றிக்கு இடையேயான இடைத்தட்டம் சற்று விலகலாம். அவ்வாறு விலகுவதை cervical spondylosis என்பார்கள். 50 வயதிற்கு மேற்பட்ட பலரிலும் இது நிகழலாம் என்றபோதும் அவர்கள் எல்லோருக்கும் வலி ஏற்படுவதில்லை.
ஆனால், இவற்றின் காரணமாக முண்ணானில் இருந்து வெளியே வரும் நரம்புகள் அழுத்தப்படும் போது வலி ஏற்படும். இதன் காரணமாக நோயானது கழுத்தில் மட்டும் இருந்தாலும் வலியானது அங்கிருந்து வரும் நரம்புகள் செல்லும் பகுதிகளான மேற்கை, முன்னங்கை, கைவிரல்கள் போன்றவற்றில் உணரப்படும்.
விபத்துகள்: - வேகமாகப் பின்னிருந்து வரும் வாகனம் முன்னால் செல்வதை இடிக்கும் விபத்துகளின் போது தலையானது சடுதியாக முற்புறம் தள்ளுப்பட்டு அதன் பின்னர் பின்புறம் தள்ளுப்படும். இதன்போது கழுத்துத் தசைநார்கள் சேதம் அடைவதாலும் பலருக்கு வலி ஏற்படுகிறது.
வேறு நோய்கள்: - ரூமட்ரொயிட் வாதம் புற்றுநோய் போன்றவை கழுத்து எலும்புகளை தாக்குவதாலும் வலி ஏற்படலாம்.
சாதாரணமா? தீவிரமா?
கழுத்துப் பிடிப்புகள் பெரும்பாலும் ஆபத்தான நோய்கள் காரணமாக வருவது அல்ல என ஆரம்பத்தில் சொன்னோம்.
இது ஆபத்தானதா பிரச்சினை அற்றதா என்பதை நீங்களே இனங்காண்பது எப்படி?
ரூமட்ரொயிட் மூட்டு வாதம், ஒஸ்டியோபொரசிஸ் போன்ற மூட்டு நோய்கள் அல்லது எயிட்ஸ், புற்றுநோய் போன்ற வேறு தீவிர நோய்கள் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும்போது கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஆரம்பித்தால் அது அசட்டை பண்ணக் கூடியது அல்ல.
வலியானது வருவதும் தானே குணமாவதும் மீண்டும் வருவதுமாக இருந்தால் பெரும்பாலும் தீவிர நோயாக இருக்காது. மாறாக வலியானது படிப்படியாக மோசமடைந்து செல்கிறதெனில் அது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.
நோயின் தாக்கம் வேறு இடங்களுக்குப் பரவுவதாக இருந்தால் அக்கறை எடுக்க வேண்டும். ஒரு கை அல்லது இரு கைகளும் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், அல்லது அதில் விறைப்பு, மரப்பது, எரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், விரல்களால் நுணுக்கமான வேலைகளைச் செய்வது படிப்படியாக இயலாது போனால் அது நரம்புகள் அழுத்தப்படுவதாலாகவே பெரும்பாலும் இருக்கலாம். எனவே மருத்துவரைக் காணவேண்டியது அவசியம்.
நடை தடுமாற்றம், கால்கள் பாதங்களில் விறைப்பு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், அதுவும் முண்ணான் அழுத்தப்படுவதாக இருக்கலாம். எனவே உடனடி அக்கறை தேவைப்படும்.
கழுத்து வலியுடன் காய்ச்சல், உடல் மெலிதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடிக் கவனம் வேண்டும்.
பரிசோதனைகள்
சாதாரண வலிகளுக்கு எந்தவித பரிசோதனைகளும் தேவைப்படாது. தானாகவே குணமடைந்துவிடும். அல்லது மருத்துவர் உங்கள் அறிகுறிகளைப் பற்றி தெளிவாகக் கேட்டு அறிவதுடன் உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதுடன் பிரச்சினையை இனங்கண்டு சிகிச்சை செய்வார்.
ஆயினும், இது சற்று தீவிரமான நோயின் அறிகுறி என அவர் எண்ணினால் குருதிப் பரிசோதனைகளுடன், எக்ஸ்ரே, சி.ரி. ஸ்கேன், நரம்புப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடும்.
சிகிச்சை
சாதாரண கழுத்து வலிகளுக்கு தீவிர சிகிச்சைகள் தேவைப்படாது. கழுத்துத் தசைகளுக்கு ஊறு கொடுக்கும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் அதே நேரம் கழுத்தை வழமைபோல பயன்படுத்த வேண்டும்.
அதாவது வலிக்கிறது என்று சொல்லி கழுத்தை ஆட்டி அசைக்காது ஒரே நிலையில் வைத்திருப்பது வலியை மோசமாக்கும். டைகுளோபனிக் ஜெல் போன்ற வலியைத் தணிக்கும் மருந்துகளை நோயுள்ள இடங்களில் பூசுவது உதவும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் பரசிட்டமோல் மாத்திரைகள் அல்லது வேறு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது வலியைத் தணிக்கும்.
மென்மையான தலையணையை உபயோகியுங்கள். மிகத் தடிப்பான தலையணைகள் கழுத்தை முற்புறமாக வளைய வைப்பதால் வலியை மோசமாக்கலாம். இதைத் தடுக்க தலையணையை கழுத்திலிருந்து பிடரி வரை படரும் வரை வைப்பது நல்லது.
மென்மையான தலையணையை உபயோகியுங்கள். மிகத் தடிப்பான தலையணைகள் கழுத்தை முற்புறமாக வளைய வைப்பதால் வலியை மோசமாக்கலாம். இதைத் தடுக்க தலையணையை கழுத்திலிருந்து பிடரி வரை படரும் வரை வைப்பது நல்லது.
கணினி, தொலைக்காட்சி, ஐபோன் போன்றவற்றை உபயோகிக்கும்போது கழுத்தானது ஒரே நிலையில் இருப்பதைத் தவிருங்கள். இடையிடையே கழுத்தைத் திருப்பி வேறுபக்கமாகப் பார்வையைச் செலுத்துவது உதவும்.
கழுத்துத் தசைகளுக்கான பயிற்சி
வீட்டில் நீங்களாகவே செய்யக் கூடிய சில எளிமையான பயிற்சிகள் சாதாரண கழுத்து வலிகளைத் தணிக்க உதவும்.
தலையை நேராக வைத்திருக்க வேண் டும். முதலில் வலது பக்கத்தில் உங்கள் உள்ளங்கையை வைத்து தலையை எதிர்ப்புறமாகத் தள்ளுவது போல செய்யுங்கள். இதன்போது தலையைத் தள்ளுப்படவிடாது தடுங்கள்.
இந்தப் பயிற்சியின் போது தலையையோ கழுத்தையோ அசைக்க வேண்டியதில்லை. ஒன்றுக்கு ஒன்று எதிராக தள்ளும்போது தலையை அசைக்காமல் இருக்க வேண் டும். இதன்போது கழுத்து தசைகள் இறுகுவதை உணர்வீர்கள்.
இதேபோல இடப்புறம், முன்புறம் பின்புறம், நாடி ஆகியவற்றிலும் கையை வைத்து பயிற்சி செய்யுங்கள். கையைத் தலையில் வைக்காது செய்வதும் கழுத்துத் தசைகள் உறுதிபட உதவும்.
ஆயினும் இவை யாவும் சாதாரண வலிகளுக்கு உதவும். கடுமையான வலி மற்றும் வேறு நோய்களின் காரணமாக ஏற்பட்ட வலி எனில், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவருடன் கலந்து ஆலோசியுங்கள்.
0 comments:
Post a Comment