இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டிற்கு உள்ள நெருக்கம் குறித்து இலங்கை மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மௌனம் அதிருப்தியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ´தி அவுஸ்ரேலியன்´ ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட பேட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதில் ராஜபக்ஷவினரின் உதவியை பெறுவதற்காக அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனமாக இருப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது.
முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்பு இருந்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலமாக ஆட்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையை ராஜபக்ஷவினருக்கு தொடர்புடையவர்களே மேற்காண்டுள்ளனர். இலங்கையின் பாதுகாப்பு படையினர் அல்லது பொலிஸாரின் ஓத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை.
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் . முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் இதனை செய்யவில்லை அவர்கள் அதன்மூலம் ஏதோ நலனைப் பெற முயன்றுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை அப்போதைய ஆஸி. குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலமாக இராஜதந்திர நடைமுறைகளை பின்பற்ற தவறினார். இதன் காரணமாக தற்போதைய குடிவரவுத்துறை அமைச்சருக்கு உரிய மரியாதை அந்த கட்சியிடமிருந்து கிடைக்காமல் போகலாம்.
ஆனால் தான் அவுஸ்திரேலியாவிற்கு எதிரானவன் அல்ல. அவுஸ்திரேலியா அனுபவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும். வேறு சில நாடுகளும் ராஜபக்ஷ அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்கிய காலத்தில் மௌனமாக இருந்துள்ளன.
0 comments:
Post a Comment