எந்த இலக்கையும் வெற்றிகொள்ளும் நம்பிக்கை தேர்தல் முடிவில் ஏற்பட்டது

நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பம் - பொலன்னறுவையில் ஜனாதிபதி

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பெரும் சவால்கள் பலவற்றை வெற்றிகொண்டுள்ள நிலையில் எதிர்கால சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆத்ம பலம் தமக்குள்ளது என குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்கும் இது அவசியம் என்றும் தெரிவித்தார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்தும் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் உலகளவில் சிறந்த கல்வியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்கால திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

பொலன்னறுவை றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப விஞ்ஞாபன கூடக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உட்பட அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களுடன் கல்விச் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

எனது வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெல்வதற்கு எனது ஆத்ம நம்பிக்கை உறுதுணையாக இருந்துள்ளது. நாம் சில வேளை இலகுவானது பற்றியே சிந்திக்கின்றோம். கஷ்டம் என்றால் அதனை கைவிட்டு விடுகின்றோம்.

அச்சுறுத்தல் அசெளகரியங்களைப் பொறுப்பேற்க விரும்புவதில்லை. சவால்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் யோசிப்போம். பயங்கரவாதிகளோடு எமது படை வீரர்கள் யுத்தம் புரிந்தனர். உயிரைத்தியாகம் செய்து அவர்கள் போராடுகையில் மிகுந்த அச்சுறுத்தலோடே அவர்கள் முன் சென்றனர்.

முதலாவது தமக்கான உயிர் அச்சுறுத்தல், உயிரைத்தியாகம் செய்தாவது யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதுணையான மனநிலையே படையினரிடம் இருந்தது. அந்த திடமான உறுதி அவர்களிடமிருந்ததால் தான் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடிந்தது.

மாணவர்கள் தமது இலக்கு அல்லது சாதகமான வெற்றியை அடைய இத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம். நான் இதுபோன்ற பலவற்றைக் கடந்தே இன்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளேன். நான் அப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந் திருந்தால் நான் எனது பாடசாலையான பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நான் மண்ணோடு மண்ணாகியிருப்பேன். அதுவே உண்மை நிலை.

தேர்தல் காலங்களில் மாலைப்பொழுதில் தொலைக்காட்சி பார்க்க எனக்கு நேரம் இருக்கவில்லை. எனினும் என்னைப் பற்றி என் நற் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும் எந்தளவு மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை எனது நண்பர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.

அரச ஊடகங்கள் என்னை எந்தளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அந்தளவு மோசமான சிந்தனைக்கு உட்படுத்தின. அரசியல் வாதிகளுக்கு இது போன்ற நிந்தனைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் நான் எதிர்கொண்டது மிக மோசமாக அமைந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

சாதாரண அரசியல் வாதியொ ருவர் ஜனநாயக நாடொன்றில் முகங்கொ டுப்பது போலன்றி இது மிகக் கொடுமை யானது. நான் இந்த சந்தர்ப்பங்களில் எனது இந்த ரோயல் கல்லூரி மாணவர்கள் பற்றி கவலைப்பட்டேன். அவற்றைப் பார்க்கும் மாணவர்கள் இந்த பாடசாலையின் பழைய மாணவனான நான் இந்தளவு ஒழுக்கமில்லாத, நேர்மையில்லாதவனா என சிந்தித்திருக்க வாய்ப்புண்டு.

எனினும் இந்த நாட்டின் புத்திசாதுர்யமிக்க மக்கள் உண்மைக்குப் புறம்பானதை நம்பாது நாட்டுக்காக மக்கள் தமது தீர்ப்பினை வழங்கினர். அதனால்தான் எனது பாடசாலையின் 50வது வருட நிறைவு நிகழ்வில் இன்று ஜனாதிபதியாக இங்கு வருகை தர முடிந்துள்ளது. 732 வருடங்களுக்குப் பின் பொலன்னறு வையிலிருந்து நாட்டுத் தலைவர் ஒருவர் உருவாகியுள்ள சந்தர்ப்பம் இது.

இதனால் கடந்த கால முள் பாதை அனுபவங்களே கடும் சவாலான போராட்டத்தோடும் இந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர்.
புதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பல மாற்றங்களுக்கு நாம் வித்திட்டுள்ளோம். இந்த சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment