துறைமுக நகர் திட்டம் உடன் இடைநிறுத்தம்

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல
கொழும்பு, துறைமுக நகர் செயற்திட்டத்தின் பணிகளை இடை நிறுத்த அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படக்கூடாதென அதன் பேச்சாளர், அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது இந்தியாவின் வற்புறுத்தலின் பேரிலா சீனாவின் துறைமுக நகர அபிவிருத்தி செயற்திட்டத்தை இடைநிறுத்தினீர்களென, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இந்தியா எம்மிடம் எவ்வித வற்புறுத்தலையும் முன்வைக்கவில்லை. இந்தியா எமக்கு எத்தனை முக்கியமானதோ அதேபோன்று சீனாவும் எமக்கு முக்கியமானதொரு நாடாகும்.

இந்த இரு நட்பு நாடுகளுக்குமிடை யிலான உறவு என்றும் தொடருமெனவும் அமைச்சர் ராஜித்த இதுகுறித்து மேலும் விளக்கமளித்தார்.

துறைமுக நகர் திட்டத்தினை நாம் முற்றாக நிறுத்திவிடவில்லை. தற்காலிகமாகவே இடைநிறுத்தியுள்ளோம். இந்த செயற்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் மாசடைவு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவையினால் துணை குழுவொன்றை நியமித்திருந்தோம்.

இந்த குழு முன்வைத்துள்ள இடைக் கால அறிக்கையின்படி குறித்த செயற்திட்டத்திற்கு சொந்தமான கம்பனி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதியின்றி செயற்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையினைத் தொடர்ந்தே உடனடியாக இந்த செயற்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.

மேலும் இந்த கம்பனி தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்ற நிறுவனங்களை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டுமென நாம் அறிவித்துள்ளோம். அவர்களது அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவை கூடி ஆராயுமெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் விஞ்ஞாபனத்தின் எந்தவொரு இடத்திலும் அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதாக கூறவில்லை. மாறாக ஊழல், மோசடிகளை நிறுத்துவதாக மாத்திரமே தெரிவித்துள்ளார். மக்கள் அபிவிருத்தியை விரும்புகிறார்கள். எனவே எமது ஆட்சியின் கீழ் அபிவிருத்திகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment