உதயசிறி விடுதலையானார்

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். 

எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. 

இந்நிலையில்  உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து நேற்று புதன்கிழமை வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயசிறியை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இந்த அறிவித்தல் நேற்று புதன்கிழமை மாலையளவிலேயே தமக்குக் கிடைக்கப் பெற்றதால் உதயசிறியை இன்று வியாழக்கிழமை அழைத்துவரப் போவதாக உதயசிறியின் உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.  அதன் பிரகாரம் உதயசிறி சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து தனது வீட்டுக்குத் திரும்பி கொண்டிருக்கின்றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment