கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், ஆப் ஸ்பின் பந்துகளை வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் திகதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சில பந்துகளை விதிமுறைகளுக்கு மாறாக வீசியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் மீது கள நடுவர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரது பந்து வீச்சை ஆய்வு செய்த பிசிசிஐ, சுனில் நரைன் ஆப் ஸ்பின் பந்துகளை வீசுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால், அவர் ஐபிஎல் போட்டியில் ஆப் ஸ்பின் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுனில் நரைனின் ஆப் ஸ்பின் பந்து வீச்சானது, பிசிசிஐ கிரிக்கெட் சட்டத்தின் 24.2 பிரிவின் கீழ் முரண்பட்டதாக உள்ளது. எனவே ஐபிஎல் உள்பட பிசிசிஐ நடத்தும் அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் ஆப் ஸ்பின் வீச தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் நக்கிள் மற்றும் குவிக்கர் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை அவர் தொடரலாம்.
நரைன் மீண்டும் ஆப் ஸ்பின்னை தொடர்ந்தால், அவரது பந்தை நோ பால் ஆக நடுவர்கள் அறிவிப்பார்கள். மேலும் அவர் குறித்த அறிக்கையையும் நடுவர்கள் தர அறிவுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமாக பந்து வீசினால், தானாகவே பிசிசிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் பந்து வீசுவதற்கான தகுதியை இழந்து விடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment