அரசாங்கம் இப்பொழுது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக தெரிகிறது; மு கா தலைவர் ஹக்கீம்!

DSC_0034

பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே!
எங்களை வெளியில் எடுப்பதற்கு  பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப் பற்றி தவறான பார்வையைக் கொடுக்கும். என்னுடைய பார்வையில் நாங்கள் நேர்மையாக அரசியலில் ஈடுபட வேண்டும். எமது மக்களுடைய மன உணர்வு பற்றி அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். இதற்கு மேலும் அரசாங்கத்தினர் பாடம் படிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். ஏனென்றால் எமது மவுசு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இவ்வாறு நீடிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இவ்வாறு வேறு காலம் வாய்க்காது. இரண்டு தரப்பினரும் எங்களது ஆதரவுக்காக ஏங்கி நிற்கிறார்கள். நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன். இந்தக் கட்சியை மிகக் கவனமாக இப்போதுள்ள கண்டத்திலிருந்து தாண்ட வைப்பது முக்கியமாகும். இந்த விடயத்தின் உண்மையான பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டினேன்.
தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக பையத் செய்துவிட்டு, அந்த முடிவுக்கு பாதகங்களை கொண்டு வரக் கூடியவாறு ஊரில் போய் கதைப்பது!
ஹரீஸ் எம்.பி இங்கு இருக்கிறாரா? ஏனென்றால், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக பையத் செய்துவிட்டு, அந்த முடிவுக்கு பாதகங்களை கொண்டு வரக் கூடியவாறு ஊரில் போய் கதைப்பது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு நேற்று கல்முனையில் நடந்திருக்கிறது. அவரை இங்கு தாமதித்து செல்லுமாறு கேட்டேன் அவர் சுகவீனம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதனை யாரும் புள்ளி போட்டுக்கொள்ளும் விடயமாக பார்க்கக் கூடாத.
தீமையாக முடிந்தால் தலைவரின் தலையில் தேங்காய் உடைப்பது!
இப்பொழுது இரண்டு அணிகள் தலைவரை அங்கு இழுத்து வந்தோம் இங்கு இழுத்து வந்தோம் என்று காட்டுவதற்கு இந்த விடயம் கையாளப்படக் கூடாது. இது ஒரு கூட்டுப்பொறுப்பு. எல்லோரதும் தார்மீக கடமை. தலைவரின் முடிவோடு நிற்பதில் தயக்கம் காட்டக் கூடாது. சிலர் அவ்வாறு தயக்கம் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்மானம் எடுத்ததன் பின்னர் நன்மையாக முடிந்தால் எல்லோருக்கும் சந்தோஷம். தீமையாக முடிந்தால் தலைவரின் தலையில் தேங்காய் உடைப்பது. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.
கண்மூடிக்கொண்டு குழியில் விழுந்த கதையை இங்கு சுட்டிக்காட்டினார்கள். அது அன்றைய சந்தர்ப்பத்தில் மக்கள் ஆதரவு பாதியளவாவது இருந்த போதுதான் நிகழ்ந்தது. அந்தக் கட்டம் வேறு. இன்றுள்ள சூழ்நிலையில் அதனை உதாரணமாக காட்ட முடியாது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறுவதைப் போல!..
அழுத்தங்களுக்கு உள்ளாகி தடுமாற்றம் அடைபவன் நானல்ல. மிகப் பெரிய சவால்களையெல்லாம் நான் எதிர்கொண்டிருக்கிறேன். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறுவதைப் போல அரசாங்கத்தை விட்டு விலக நேர்ந்தால், ‘ ஜனாதிபதியை கருத்து வேறுபாடு கொண்ட முன்னாள் நண்பர்’ என்று கூறக் கூடிய நிலையில் பிரிந்து செல்ல வேண்டும். மிகவும் இராஜ தந்திரமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். ‘ஜனாதிபதியை முஸ்லிம் இன விரோதி’ என்று கட்சியின் முக்கியமான ஒருவர்  கூறுவதைப் போல சொல்லிவிட்டுப் போகக் கூடாது. அது மிகப் பிழையான விடயமாகும். அவ்வாறு யாரும் பேசுவது பக்குவமானதல்ல. அவ்வாறு கூறக் கூடாது. இது பொறுப்பு வாய்ந்த கட்சி. என்னவாக இருந்தாலும் அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து விடக் கூடாது.
ஜனாதிபதியிடம் பல நல்ல பண்புகளும் உள்ளன. அவர் ஒன்றுக்கும் பயந்தவர் அல்ல. ஆனால் மக்கள் வீதியில் இறக்கப்பட்டால் நிலைமை வேறு.
மைத்திரி பதவிக்கு வந்தால் ஸ்திரமான ஆட்சியிராது!
தவிசாளர் பேசும் பொழுது ‘மைத்திரி பதவிக்கு வந்தால் ஸ்திரமான ஆட்சியிராது’ என்றார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது எப்படி? இந்த நாடு திடீரென ஸ்திரத்தன்மை அற்றதாக போய்விடுமா? தெற்காசியாவிலேயே இராணுவ ஆட்சிக்கு உட்படாத நாடுகள் இந்தியாவும், இலங்கையும் தான். என்னைப் பொறுத்தமட்டில் இராணுவ ஆட்சியின் கீழ் இந்த நாட்டை ஒரு கிழமை கூட வைத்திருக்க முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சோர்வு நிலை காணப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
முதலில் எங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஜனாநாயகத்தின் காரணமாகத்தான் எங்களை வளைத்துப் பிடிப்பதற்கு இந்த அரசாங்கம் இவ்வளவு தடுமாறுகிறது. இந்த அரசாங்கம் எங்களை வளைத்துப் போடுவதற்கு வேறென்ன காரணம்?
எங்களது பலம் என்னவென்பதும் பலவீனம் என்னவென்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இன்று எங்களது பலவீனத்தை விட, எங்களது பலத்தையே எல்லோரும் எடைபோடுவதனால் நாங்கள் திட்டவட்டமான ஒரு தீர்மானத்திற்கு வரலாம்.
நாங்கள் பேச வேண்டும். அரசாங்கத்துடன் பேசாமல் இருக்க முடியாது. ஆனால், எங்களது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பேச்சுவார்த்தைகளுக்கு வருவதில்லை. அவ்வாறிருந்தால், இந்தக் கட்சியை முன்கொண்டு செல்ல முடியாது.
சமூகம் இன்று மிகவும் அல்லோல கல்லோலப்படுகின்றது. தலைமைத்துவ மட்டத்தில் என்ன நெருக்குவாறம் வந்தாலும் இந்தக் கட்சியின் இருப்பை தக்கவைத்துக்கொள்வது எனது கடமை. இன்று காலையில் கண்டியில் என்னைச் சந்தித்த வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் என்னை ஒருவாறு அடையாளம் கண்டுகொண்டதன் பின்னர், ‘இது உங்களுக்கு ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு கஷ்டமான காலம் அல்லவா? நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் சிங்களவர்களாகிய நாங்கள் உங்களை விமர்சிக்கத்தான் செய்வோம். அதற்காக நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம். உங்களது சமூகத்தின் நன்மை கருதி நீங்கள் முடிவு எடுங்கள்’ என்றார்.
கட்சி என்பது நம்பகத்தன்மையை பேணிக்கொள்ள வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் எங்களது நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பார்வை இருந்தாலும், அரசியல் தலைமைகள் மத்தியிலும் அதே நிலைமை காணப்படுகின்றது. ‘இவரை நம்ப முடியாது பாய்ந்து விடுவார்’. என நினைக்கிறார்கள். ‘என்னை நம்புங்கள்’ என்று ஜனாதிபதியிடம் நினைவூட்டிக்கொள்வது இதனால்தான்.
பொதுபலசேனாவின் மீதுள்ள ஒரு மெத்தனப் பார்வை!
எனக்குள்ள நெருக்கடியை ஜனாதிபதியிடமும், ஏனையவர்களிடமும் சொல்ல வேண்டும். ஜனாதிபதி சில அனுமானங்களின் அடிப்படையில் பொதுபலசேனாவை ஒரு மெத்தனப் பார்வையோடு நோக்குபவராக இருக்கலாம். பேருவளைச் சம்பவத்தின் போது, ஞானசார தேரர் பேசிய கீழதரமான இனவாத உரையில் மட்டும் ‘பெரியவருக்கு கூட தெரியவதில்லையா’? என்று கூறியது முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிவிட்டது. இதற்காகத்தான் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய போன்றவர்களிடம்  பள்ளிவாசல்களை உடைத்த விஷயங்களையாவது சரிசெய்யப் பாருங்கள் என்று நான் கூறி வருகிறேன்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் நீடித்தாலும் அல்லது பின்னொரு காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றாலும் முதலில் அவர்களது தோற்றப்பாட்டை சீராக்கிக்கொள்ள வேண்டும். அவர்களது தோற்றப்பாடு எமது மக்களை மிகவும் மோசமாக பாதித்திருக்கிறது. அவர்களைப் பற்றி எதைச் சொன்னாலும் மக்களின் மனப்பதிவை மாற்றுவது கஷ்டமானது. எனவே இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களது நன்மைக்காகவே இதனை நான் சுட்டிக்காட்;டுகிறேன். இதற்கு முன் நாங்கள் அனுபவித்திராத இந்த ரக அரசியலை கண்டு வருகிறோம்.
ஹெல உருமய என்ற கட்சியைப் பற்றி நாங்கள் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. கம்மம்பில விலகிய போது அதனை எவ்வாறு சம்பிக்க ரணவக்க எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பாருங்கள். ‘கம்மன்பில ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி. அந்த விஷயத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டுவிடுவோம்’ என்று கூறிவிட்டார். அவ்வாறன்றி நாங்கள் எங்களுக்குள்ளே தர்க்கித்துக்கொண்டு, பக்குவம் தவறி ஆளுக்கு ஆள் ஏசிக்கொண்டும் பேசிக்கொண்டும் திரிகின்ற கலாசாரம் எங்களை விட்டும் அகல வேண்டும். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. இதனைப் பற்றி கட்சி கவலைப்படுகின்றது. இதனால் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரமும் ஆவேசமும் வருகிறது. இந்த நிலைவரம் மாற வேண்டும்.
ஆட்சியாளர்களின் ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்களில் உடன்பட முடியாமல் ஹெல உருமயவினர் ஒதுங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்க்கட்;சியினைப் பொறுத்தவரையில் அவர்களது அரசியல் மேடைகளில் அதிகமானோர் எதிர்ப்பார்த்தது அத்துரலிய ரதன தேரரினதும், சம்பிக்க ரணவக்கவினதும் உரைகளைத் தான் என கேள்விப்படுகிறேன். இந்த இருவரும் தான் அரசாங்கத்தின் முகத்திரையை கிழிப்பவர்களாக இன்று பார்க்கப்படுகிறார்கள்.
நல்லாட்சியைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டோம்!
நாங்கள்  நல்லாட்சியைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டோம் என்ற நிலையிலேயே நோக்கப்படுகிறோம். எங்களது பிரதேசங்களில் மக்களின் தேவைகள் மற்றும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சரிசெய்வது என்வற்றைப் பற்றி மட்டுமே கதைத்துக்கொண்டிருக்கிறோம். பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நல்லாட்சியைப் பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவையிருப்பதை மறந்துவிடக் கூடாது.
தீர்மானம் எடுப்பதற்கு முன்பு அவசரப்படக் கூடாது. அது ஆரோக்கியமான விடயம் அல்ல. அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்ல நேரிட்டாலும் அந்தப் பிரிவு ஒரு நல்ல புரிந்துணர்வோடு நடக்க வேண்டும். நாங்கள் சதியின் அங்கமல்ல என்பதை அராசங்கம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
2005, 2010 ஆம் ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட முடிவுகளில் பிழைவிட்டதாக மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு கூறியதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பொழுது கட்சி எடுத்த மசூரா பிழையென்று அவரால் இப்பொழுது கூற முடியாது.  தோல்விகள் வருவதுண்டு. ஆனால், நாங்கள் எடுத்த முடிவின் பின்னால் மக்கள் வந்தனர்.
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூட பல யுத்தகளங்களை சந்தித்திருக்கிறார்கள். அந்த யுத்தங்களில் வெற்றியும் சிலவற்றில் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.
அரசாங்கம் இப்பொழுது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக தெரிகிறது!
அரசாங்கம் இப்பொழுது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சில கோரிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கலாம் என்று நம்புகிறார்கள்.
அரசாங்கம் எவ்வாறாயினும் வெற்றிபெற்று விடும். ஆகையினால் அரசாங்கத்தோடு மட்டுமே நாம் இருக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும். அவ்வாறு கூறுவதே வங்குரோத்து தனமானதாகும். இரண்டு தரப்புகளிலும் சாதக, பாதகமான அம்சங்களும் விடயங்களும் உள்ளன.
எங்களை வெளியில் எடுப்பதற்கு  பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப் பற்றி தவறான பார்வையைக் கொடுக்கும். என்னுடைய பார்வையில் நாங்கள் நேர்மையாக அரசியலில் ஈடுபட வேண்டும். எமது மக்களுடைய மன உணர்வு பற்றி அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். இதற்கு மேலும் அரசாங்கத்தினர் பாடம் படிக்க வேண்டியதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறினால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மீட்டுக்கொள்வதற்கு தரப்பினருக்கும் நாங்கள் தேவைப்படுவோம். பாராளுமன்றத்தில் நூற்றி ஐம்பது உறுப்பினர்களுக்கு அதிகமாக பெரும் விடயம் இரண்டு தரப்பினருக்கும் கஷ்டமாகப் போகின்றது. ஒரு காபந்து அரசாங்கமாக எதிர்க்கட்சி கொண்டு போனாலும் ஆளும் கட்சியும் இப்பொழுது சில பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்து, இன்னும் சிலரையும் இழக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தேர்தலில் வென்றாலும் மிகச் சிறிய வாக்கு வித்தியாசம் தான் காணப்படும்.
இந்தக் கட்சி ஒரு பலமான இயக்கம். இதில் நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இப்பொழுது தேசியப் பத்திரிகைகளில் நாள்தோறும் வெளிவரும் கேலிச்சித்திரங்களைப் பார்த்தாலே எங்களது பெறுமானமும், மவுசும் எத்தகையது என்பது புலப்படும்.
எடுக்கின்ற தீர்மானம் எங்களால் தான் மேற்கொள்ளப்பட்டது!
என்ன முடிவு எடுத்தாலும், ஒன்றை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறேன். நாம் மேற்கொள்ளும் தீர்மானம் எதுவாக இருந்தாலும், நாம் அரசாங்கத்தோடு நிற்பதாக இருந்தால் எனக்கு ஒரு தெளிவு வேண்டும். எடுக்கின்ற தீர்மானம் எங்களால் தான் மேற்கொள்ளப்பட்டது  என்று இன்னும் இரண்டு, மூன்று ‘தலைவர்கள்’; இருக்கின்ற நிலையில் இந்தக் கட்சியை முன்கொண்டு செல்ல முடியாது. இந்த அரசாங்கம் என்னை பொம்மையாக வைத்துக்கொண்டு,  இன்னும் நான்கு ஐந்து பேரை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகின்ற வேலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
எங்களது உயர்பீட உறுப்பினர்களை கட்சியிலிருந்து பிரித்தெடுத்து வடக்கில் அவர்களோடு சேரந்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்த கீழ்த்தரமான காரியத்தை முக்கிய அரசியல்வாதிகள் சிலர் கையாண்டது எல்லோருக்கும் தெரியும். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவர்கள் இப்போது நட்டாற்றில் விடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமை எங்களிடமிருந்து பிரிந்து சென்று கட்சியை கருவறுக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுமென எச்சரிக்கிறேன்.
ஏனென்றால், மக்கள் மிகவும் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள். எமது போராளிகள் மிகவும் ஆவேசத்தோடு இருக்கிறார்கள். இதுவொரு பலமான இயக்கம். வெறும் அரசியல் அதிகாரத்திற்கு பின்னால் அள்ளுண்டு போகும் இயக்கமல்ல. ‘பிச்சை வேண்டாம். நாயைப் பிடி’ என்று போனதால் தான் எங்களுக்குத் தலை குனிவு ஏற்பட்டது. என்னைப்பொறுத்தவரை எந்த அரசாங்கமாக இருந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுக்காமல் ஆதரவு அளிப்பது கட்சிக்கு மிகப் பெரிய கௌரவமாகும் இருக்கும் என்று நம்புகிறேன். அமைச்சுப் பதவிக்காக பல்லிளிப்பது மிகவும் கேவலமானது.
எங்களது மக்களின் மன உணர்வுகளை புரிந்துகொண்டு அநீதிகளை ஏற்றுக்கொண்டு மிக அவசரமாக அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். அல்லது மனப்பூர்வமாகவும் சிநேகபூர்வமாகவும் வெளியேறிச் செல்வதற்கு விட்டுவிட வேண்டும்.
DSC_0032
DSC_0060DSC_0041
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment