சுமுகமான தீர்வை எட்டியுள்ள கிழக்கு முதலமைச்சர் விவகாரம்

Image result for Eastern provinceகிழக்கு முதலமைச்சர் விவகாரம் நல்லிணக்க முயற்சி களைப் பாதித்துவிடுமோ என்றிருந்த அச்சம் புரிந்து ணர்வின் மேலீட்டால் புஸ்வாணமாகிவிட்டது. கட்சி களை விட மாகாண சபை உறுப்பினர்களே முதலமைச்சர் விவகாரத்தில் முண்டியடித்து மோதிக் கொண்டனர். கிழக்கிலுள்ள இரண்டு சமூகங்களின் தலையாய தலைமைகள் முதலமைச்சர் விடயத்தில் நாகரிகமாக நடந்து கொண்டமை புதிய அரசாங்கத்தின் இணக்க அரசியலுக்கான கலாசார சமிக்ஞைகளாகும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் முன்னோடியே மாகாண சபை முறைமைகளாகும். இதை உணராமல் தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொள்வது சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலா ஷைகளை அர்த்தம் இழக்கச் செய்து விடும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ¤ம் உணர்ந்து நீண்ட தூர நோக்கில் சிந்தித்தன. தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயத்தில் கிழக்கு மாகாணம் என்கின்ற எல்லைக்குள் நின்று சிந்திக்கவில்லை.

தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களின் விரிந்த, விசாலமான எல்லைப் பரப்பிலுள்ள பிரச்சினைகள், இரு சமூகங்களும் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள சவால்களை இந்த அரசாங்கத்தின் ஆயுளுக்குள்ளே தீர்த்துவிட வேண்டுமென மிக ஆழமாக யோசித்துள்ளதை கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பில் அவதானிக்க முடிந்துள்ளது. இது இன்றைய யதார்த்தத்தின் அவசியமான செயற்பாடாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாகும். இந்த யதார்த்தத்தை தமிழ்க் கூட்டமைப்பு மட்டுமல்ல, முஸ்லிம் காங்கிரஸ், அ.இ.ம.கா. உட்பட்ட சிறுபான்மைக் கட்சிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளன.

சிறுபான்மையினரின் வாழ்விட எல்லைகளிலிருந்தும் அம் மக்களின் அபிலாஷைகளை காப்பாற்றவும் த.கூட்டமைப் புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ¤ம் உழைத்தமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு வரப்பிரசாசாதமே. இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று குறியாயிருந்து செயற்பட்ட சில மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துகள் சிந்தனைகள் இணக்கப்பாட்டு அரசியலுக்கு பேரிடியாய் அமைந்ததை மறப்பதற்கில்லை. அதிகாரம், ஆட்சியை தம்வசப்படுத்த இவர்கள் மதத்தையும் இனத்தையும் தூக்கிப்பிடித்து மக்களை உணர்ச்சி வெறியூட்ட முனைந்தது அரை வேக்காட்டுத்தனத்துக்கு ஒப்பானதாகும்.

ஆனால், கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். மக்களின் இத்தெளிவு எவரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை பறை சாற்றியது மட்டுமல்ல, இவ்வாறான இன, மத, பிரதேசவாத சிந்தனையுடையோருக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை என்பதையும் உணர்த்தியிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை ஆட்சியிலிருப்பவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பற்றிக் கவலையில்லை. நிம்மதி, பாதுகாப்பு, அபிவிருத்தி, தங்கள் மீது அக்கறை, கரிசனையுடன் செயற்படுவோரையே அரசியலுக்குள் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்யாத சேவைகளா? அபிவிருத் திகளா? ஆனால், மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அவரைத் தோற்கடித்தது அவரின் உச்சக்கட்ட இனவாதப் போக்கிற்கே. 2008 ஆம் ஆண்டு சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு முதல்வரானார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஓரு தமிழர். திருகோணமலை மாவ ட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான நஜிப் ஏ மஜீத் முதலமைச்சரானார். இந்நியமனங்களில் பிரதேசம் இனம், மதம் கருத்தில் கொள்ளப்படவில்லை.

இயன்ற வரை சேவைகள் மக்களைச் சென்றடைந்தன. இன்று ஏற் பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகியுள்ளார். இந் நியமனத்தில் கையாளப்பட்டுள்ள நேர்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஆட்சி மாறிய பின்னரும் இன்றைய நல்லிணக்க அரசாங்கம் கெளரவித்துள்ளது. அது மட்டுமல்லாது; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் தெரிவாகியுள்ளமையும் இன இணக்கப்பாட்டிற்கான சமாந்திரமாகவே கொள்ள முடியும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களும், மக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்றனர். யுத்தம் எவ ரையும் விட்டுவிடாமல் பாதிப்புறச் செய்துள்ளது. எனவே மட்டக்களப்பிலிருந்து மீண்டுமொரு தடவை முதலமைச்சர் தெரிவாகியுள்ளமை பொருத்தமான தீர்மானமாகும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் நிலைக்கும் தரத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டியுள்ளமையும் இந்த முதலமைச்சர் நியமனத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதே உண்மை.

கிழக்கில் ஒரு விட்டுக்கொடுப்பு நடந்தால் வடக்கில் ஓரு நன்மை வடக்கில் ஒரு நன்மை கிடைக்குமானால் கிழக்கில் ஒரு விட்டுக்கொடுப்பு என்கின்ற சக்கரச் சுழற்சியை இரண்டு சமூகங்களினது அரசியல் தலைமைகள் உணர வேண்டி யுள்ளது. தமிழ், முஸ்லிம் தலைமைகள் புரிந்துணர்வுடன் நடந்தாலும் பதவிக்காக அலையும் பிரதேச அரசியல்வாதி களின் செயற்பாடுகள், கவலையளிக்கின்றன. ஏப்ரல் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கத்துக்கு முன்பே கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் சர்வ கட்சி அரசை அமைத்துள்ளமை இந்நாட்டின் சிறு பான்மை சமுகங்கள் ஐக்கிய இலங்கைக்கு வாழ விரும்புவதையே காட்டுகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment